Powered By Blogger

Saturday, September 1, 2012

வெண்மைப் புரட்சி: செவிலியர்கள் போராட்டம் தரும் புது உற்சாகம்


வொயிட் காலர் தொழிலாளர்கள் அவ்வளவு எளிதில் போராட்டத்திற்கு வரமாட்டார்கள் என்பதைப் பொய்யாக்கி தங்கள் போராட்டத்தின் வாயிலாக உழைக்கும் மக்களுக்கு ஒரு புது உத்வேகம் கொடுத்துள்ளனர் செவிலியர்கள். 5 லட்சம் வரை செலவு செய்து செவிலியர் படிப்பை முடிக்கும் செவிலியர்கள், லட்சக் கணக்கில் நோயாளிகளிடம் பணத்தை வாங்கிக் குவிக்கும் தனியார் மருத்துவமனைகளில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ரூ. 3000 க்கும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். வருடங்கள் கடந்தாலும் அவர்களின் ஊதியம் ரூ.7000 த்தைத் தாண்டுவதில்லை. இந்தக் குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு வாங்கிய கல்விக் கடனை அடைக்கவும், ஏறியுள்ள விலைவாசியில் குடும்பத்தை நடத்தவும் முடியாமல் அல்லலுறுகின்றனர் செவிலியர்கள். அது மட்டுமல்லாமல் படிப்பிற்கான ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளும் நிர்வாகங்கள் வேலையைவிட்டு நிற்பதாகக் கூறினால் ரூ 50,000 செலுத்திவிட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் படி அவர்களை மிரட்டுகின்றன. 12மணி நேர வேலை, ஒ.டி. கிடையாது, நைட் சிஃப்ட் அலவன்ஸ் என்பது மிகவும் குறைவு, ஹாஸ்டல் கட்டணம் மிக அதிகம் என நிர்வாகம் செய்யும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள செவிலியர்கள் களம் இறங்கினார்கள். 

அவர்கள் ஆல் இந்தியா பிரைவேட் நர்சஸ் அசோசியேசன் (APaaaAPPNA (AIPNA)) என்ற அமைப்பை நிறுவி, ஒவ்வொரு மருத்துவமனையிலும் அதன் கிளை அமைப்பினைத் துவங்கிப் போராடத் தொடங்கினர். காட்டுத் தீ போல இந்தியா முழுவதும் பரவிய இந்தப் போராட்டம் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களை ஸ்தம்பிக்க வைத்தது. சென்னையில் அப்பல்லோ, மலர். மெட்ராஸ் மெடிக்கல் மிசன், வி.ஹச்.எஸ்., விஜயா உட்பட பல மருத்துவமனைகளிலும் கோவை, சேலம் போன்ற தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் இப்போராட்டம் பரவியது. போராட்டம் தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆன பின்னரே மருத்துவமனை நிர்வாகங்கள் இறங்கி வந்தன. இந்தப் போராட்டத்தின் மூலம் சில சலுகைகளையும் 50 சதவிகிதம் சம்பள உயர்வையும் பெற்ற போதும் இன்னும் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகள் பல நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இன்றைய இளைய தலைமுறை தொழிலாளர்களிடையே போராட்டம் மூலம் மட்டுமே தங்கள் கோரிக்கைள் சாதிக்கப்பட முடியும் என்ற எண்ணம் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. இன்று செவிலியர்கள் மத்தியில் தோன்றியுள்ள இந்தத் தீ அணைந்து விடாமல் மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கு அனைத்துத் துறைகளைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கமும் கருத்தாலும் கரத்தாலும் தங்களது பங்கினை அளிக்க வருமாறு  அறைகூவி அழைக்கிறோம்.

No comments:

Post a Comment